பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
12:04
மாமல்லபுரம் : ரஷ்ய பக்தர்கள், மாமல்லபுரம் கோவிலில் ஹோமம் வளர்த்து, வழிபட்டனர். நம் நாட்டின், ஹிந்து ஆன்மிக பாரம்பரிய கலாச்சாரம், சர்வதேச நாட்டினரை, தற்போதும் ஈர்க்கிறது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், நம் நாட்டின் யோகா, தியானம் உள்ளிட்ட மனம், உடல் சார்ந்த பயிற்சி முறைகளை மேற்கொண்டு, பின்பற்றவும் விரும்புகின்றனர்.சைவ, வைணவ சமயங்களை, விருப்பத்திற்கேற்ப உணர்ந்து, இந்திய கோவில்களில் சுவாமியை தரிசித்து வழிபடுகின்றனர். இந்நிலையில், ரஷ்ய பக்தர்கள், மாமல்லபுரம் கோவிலில், நவக்கிரக ஹோமம் நடத்தினர். நவக்கிரக அருளாசி பெற விரும்பிய, 18 பக்தர்கள், இங்குள்ள மல்லிகேஸ்வரர் கோவிலில், இவ்வழிபாடு நடத்தினர். நவக்கிரகங்கள், அவற்றால் நாம் அடையும் இன்னல்கள் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது.நவக்கிரக ஹோமம் முன் அமர்ந்து, சிவாச்சாரியார் விளக்கியதை பின்பற்றி, பரிகார சங்கல்பம் செய்து, நவக்கிரகங்களை, கலசத்துடன் வலம் வந்து, சுவாமியை தரிசித்து வணங்கினர்.