பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
11:04
சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று, தேரோட்டம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, சிறு தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில், சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து, சிறுவர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். இன்று காலை, மகா சுதர்சன யாகம், மாலை, திருக்கல்யாண உற்சவம், நாளை காலை, 81 கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு திருமஞ்சனம் நடக்கவுள்ளது. வரும், 25 இரவு, சப்தாவரணம், 26, 27 முறையே, பெருமாள் மற்றும் எம்பெருமானார், டோலோற்சவத்துடன் விழா நிறைவடையும்.
* சங்ககிரி மலை மீதுள்ள சென்னகேசவப் பெருமாள் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி, சுவாமி, மலையிலிருந்து இறங்கி, நகருக்கு எழுந்தருளினார். அன்றிரவு, அன்னபட்சி வாகனத்தில் அருள்பாலித்தார். வரும், 27ல் திருக்கல்யாண உற்சவம், புஷ்ப வாகனம், 28ல், குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வருவார். 29ல், தேர் வடம்பிடித்தல் நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு, மலையடிவாரம் உள்ள மண்டபத்தில், தினமும் காலை, மாலையில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும்.