சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.
திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு, நீராடக் கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்குப் பாலுாட்ட, அம்பிகையோடு சிவன் அங்கு வந்தார். சம்பந்தரைக் கையில் வாரி எடுத்த அம்பிகை, பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், ‘உனக்குப் பாலுாட்டியது யார் ?’ என கோபித்தார். அப்போது சம்பந்தர், ‘தோடுடைய செவியன்....’ என்ற முதல் தேவாரப் பாடலைப் பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். அதை நாம் தரிசிக்க இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். இன்று தரிசித்தால் செல்வம், மனநிம்மதி நிலைக்கும்.