அலீமக்தூம் மஹாயிமீ என்ற மகான் இருந்தார். அவர் சிறுவனாக இருந்த காலத்தில், ஒருநாள் இரவு அவருடைய தாயார், “மகனே! எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா”என்றார். தண்ணீர் முகர்ந்த போது, குடத்தில் தண்ணீர் இல்லை. அருகிலுள்ள கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவதற்குள், தாயார் தூங்கிவிட்டார். விடிய விடிய தாயாரின் அருகில் தண்ணீர் கோப்பையுடன் மஹாயிமீ நின்றார். காலையில் தாயார் கண் விழித்துக் கேட்டால், உடனே அவருக்கு கொடுக்க வேண்டும் என காத்திருந்தார். மறுநாள் காலை தாயார் கண் விழித்தார். தன் அருகில் மகன் கோப்பையுடன் நிற்கக் கண்டார். வியப்பு மேலிட, “மகனே! எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்?” என்று கேட்டார். “அம்மா! நேற்றிரவு தண்ணீர் கேட்டீர்கள். கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். விழித்தவுடன் கேட்டால் கொடுப்பதற்காக அருகிலேயே காத்திருக்கிறேன்,” என்றார் மஹாயிமீ.
தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார். இறைவன் அதை ஏற்றுக்கொண்டான். ஆகையால், அவர் பெரிய மகானாக விளங்கினார். பெற்றவர்கள் மரணமடைந்து விட்டாலும் கூட, அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை உண்டு என்கிறார் நபிகள்நாயகம்.
இதோ! அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்.
* மரணமடைந்த பெற்றோருக்காக, அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கோருங்கள். * பெற்றோர்களின் உறவைத் துண்டிக்காமல் வாழுங்கள். அவர்களுடைய நண்பர்களை பெருமைப்படுத்துங்கள். * மரணமடைந்த பெற்றோருக்காக நீங்கள் செய்யும் தர்மத்தின் நன்மை உங்களுக்கு கிடைக்கும். * பெற்றோர்களின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் உள்ளது. அவர்களின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தம் உள்ளது. தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்றுரைத்த அண்ணலாரின் பொன்மொழியை ஏற்று, பெற்றவர்களுக்கு பணிவிடை செய்யக் கற்றுக் கொள்வோம்.