சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் வீரத்தை நிலைநாட்ட, எல்லா நாட்டுக்கும் படையெடுத்துச் செல்வர். பாண்டிய இளவரசியான மீனாட்சி திக்விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார். பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெற்றி கொண்டாள். அதன் பின் சிவனின் கைலாயம் நோக்கி புறப்பட்டாள். நந்தீஸ்வரர் தலைமையில் வந்த சிவகணங்களுடன் போரிட்டு வென்றாள். இறுதியில் சிவனே போர் புரிய வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரது அழகில் மனதை பறி கொடுத்தாள். நாணத்தால் முகம் சிவந்தாள். ’இவரே உன் மணாளர்’ என அசரீரி ஒலித்தது. திக்விஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது. இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும்.