இந்த உலகம் பணத்தின் மீது மட்டும் தான் பாசம் வைத்திருக்கிறது. பணத்தின் மீது பாசம் வைப்பது இவ்வுலகைப் பொறுத்தவரை இன்பமாகத் தெரியும். ஆனால், மறுமை நாளில் இந்த ஆசை மனிதனை நரகத்தில் தள்ளிவிடும். நபிகள் நாயகம் இதுபற்றி கூறும் போது, “மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் கொண்டு வரப்படும் போது, பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியை போன்ற நிலையில் இருப்பான். பிறகு இறைவன் புறத்தில் இருந்து, நான் உனக்கு செல்வத்தை அள்ளித்தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எவ்வாறு செயல்புரிந்தாய்?’என்று கேள்வி கேட்கப்படும். அதற்கு அவன், இறைவா! நான் செல்வத்தை அதிகமாக திரட்டி, அதனைப் பன்மடங்காகப் பெருக்கி, அதை உலகத்திலேயே விட்டு வந்துவிட்டேன். என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பினால், அவை அனைத்தையும் என்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்’ என்று கூறுவான். சரி...நீ மறுமைக்காக என்ன அனுப்பி வைத்தாய்? அதைக்காட்டு,” என்று அடுத்தகேள்வி கேட்கப்படும்.அதற்கும் அவன் முந்தைய பதிலையே கூறுவான். இவ்வாறு சொல்பவன் நரகத்தில் தள்ளப்படுவான்,” என்கிறார். பூமியில் வாழும் போது மட்டுமல்ல, மரணத்திற்குப் பிறகும் மனிதன் பணத்தைப் பற்றியே பேசுகிறான். பணத்தை தவிர அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. சொர்க்கத்தில் வாழ வேண்டுமானால், பூமியில் இறைவனால் கொடுக்கப்பட்ட பணத்தையும், பிற வசதிகளையும் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை செய்திருக்க வேண்டும். யாருக்காவது ஒருவேளை உணவு, ஏழை மாணவனுக்கு ஒரு நோட்டு புத்தகம், ரமலான் நோன்பின் போது குறைந்த பட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது தானமாகக் கொடுத்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் போனால், அவன் நரகத்தில் தள்ளப்படுவான்.