சங்ககாலத்தில் ராஜகுமாரிகள் மனம் விரும்பியவருடன் திருமணம் அமைய மன்மதனை வழிபடும் வழக்கம் இருந்தது. இதற்கு ‘கன்னி நோன்பு’ என்று பெயர். திருமாலின் மகனான மன்மதனுக்கு ‘காமன்’ என்றும் பெயருண்டு. எனவே இதை ‘காமன் நோன்பு’ என்றும் சொல்வர். அக்காலத்தில் மன்மதனுக்கென தனிக்கோயில்கள் இருந்தன. இவை ஊருக்கு வெளியே இருக்கும் தெய்வ சதுக்கத்தில், ‘காமன்கோட்டம்’ என்ற பெயரில் இருக்கும். சுரமஞ்சரி என்னும் ராஜகுமாரி, தன் காதலனான சீவகனை அடைய எண்ணி ஏழுநாள் கன்னி நோன்பு நோற்றதாக சீவகசிந்தாமணி கூறுகிறது. அரண்மனைத் தோழிகளோடு கூட்டு வண்டியில் புறப்பட்ட சுரமஞ்சரி, விரதத்திற்காக பூஜை சாமான், அலங்காரப்பொருள், விளையாட்டு சாமான்கள், கிளி, நாகணவாய்ப்புள் போன்ற பறவைகளை தன்னுடன் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த விரதத்தின் போது, எந்த ஆணையும் பார்ப்பதில்லை என்று பெண்கள் சபதம் எடுத்துக் கொள்வர். விரதமிருக்கும் பெண்கள் ஏழாம்நாள் நீராடுவதை ‘ஆராட்டு’ என்பர். முதல்நாளும், ஏழாவது நாளும் உணவும், உடையும் தானமளிப்பர்.