பதிவு செய்த நாள்
17
மே
2018
11:05
சேலம்: வசந்த விழா உற்சவத்தை முன்னிட்டு, சவுந்தரவல்லி தாயார், சேர்த்தி சேவையில் சவுந்தரராஜருடன் அருள்பாலித்தார். அக்னி நட்சத்திர உக்கிரத்தை குளிர்விக்க, சிவாலயங்களில், தாரா பாத்திர அபி?ஷகம் செய்வது போல், விஷ்ணு கோவில்களில், வசந்த உற்சவம் நடத்தப்படும். அதன்படி, சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், எட்டாம் ஆண்டாக, ஐந்து நாட்கள் நடக்கும் வசந்த விழா, நேற்று தொடங்கியது.
செயற்கை தெப்பக்குளத்தில் நந்தவனம் போன்று அலங்கரித்து, காய்கனிகளை தொங்கவிட்டு, நடுவில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில், சவுந்தரவல்லி தாயாருடன் பெருமாளை எழுந்தருளச்செய்து, சேர்த்தி சேவையில் சிறப்பு பூஜை நடந்தது. வரும், 20 வரை, தினமும் மாலை, தாயாருடன் சவுந்தரராஜருக்கு, சேர்த்தி திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்படும். பக்தர்கள், பக்தி பாடல்களை பாடி, வீணை, நாதஸ்வரம் உள்ளிட்ட கருவிகளை இசைக்கவுள்ளனர். கிருஷ்ண பிருந்தாவன கோலாட்ட குழுவினரின் கோலாட்டம், கோணங்கி ஆட்டம், பரதநாட்டியம் நடக்கவுள்ளது.