பதிவு செய்த நாள்
17
மே
2018
12:05
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, அமர்நாத் குகை கோவிலுக்கு செல்ல, இதுவரை, 1.70 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் அமைந்துள்ள, அமர்நாத் குகை கோவிலில், பனி லிங்க தரிசனம் செய்ய, ஆண்டுதோறும், லட்சக் கணக்கான பக்தர்கள், புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.இந்த பயணத்தில் பங்கேற்க விரும்புவோர், முன்பதிவு செய்வது அவசியம். இந்த ஆண்டுக்கான, அமர்நாத் புனித யாத்திரை, அடுத்த மாதம், 28ல் துவங்கி, 60 நாட்கள் நடக்க உள்ளது. இதற்கான முன்பதிவு, மார்ச், 1ல் துவங்கியது. நாட்டின் பல பகுதிகளில் செயல்படும், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி மற்றும் எஸ் வங்கிகளின், 440 கிளைகளில், இதற்கான முன்பதிவு செய்யப்படுகிறது.இதுவரை, 1.39 லட்சம் பேர், தரை வழியாகவும், 28 ஆயிரத்து, 516 பேர், ஹெலிகாப்டர் மூலமும் யாத்திரை செல்ல முன்பதிவு செய்துள்ளனர். 2,122 வெளிநாட்டினரும், அமர்நாத் யாத்திரையில் பங்கேற்ற முன் பதிவு செய்துள்ளனர். 13 வயதுக்கு உட்பட்ட மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டோர், இந்த யாத்திரையில் பங்கேற்க அனுமதி கிடையாது.
முழு உடல் நல பரிசோதனைக்குப் பின்பே, யாத்திரையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். யாத்திரையில் பங்கேற்க விரும்புவோர், உடனடியாக பதிவு செய்யும் வகையில், ஆன் ஸ்பாட் ரெஜிஸ்ட்ரேசன் மையங்களும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.