திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று உச்சிக் கால பூஜை இல்லை. தியாகராஜப் பெருமான் அன்று மதியம் அம்பர் மாகாளம் என்ற திருத்தலத்துக்கு எழுந்தருளி சோம யாகத்தில் அவிர்பாகம் பெறுவதற்காகச் சென்று விடுவதாக ஐதிகம் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் 14 நாட்கள் வைகாசி விழா நடைபெறுகிறது. முதல் 3 நாட்கள் மலைமீதும், மற்ற நாள் வைபவங்கள் அடிவாரத்திலும் நடக்கும். 9ம் நாள் விசாக நட்சத்திர நாளில் இறைவன் தேரில் வலம் வருவார். 14ம் நாள் மீண்டும் மலைக்கு எழுந்தருளுவார். நாகை மாவட்டம் ஆச்சாள்புரத்தில் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞான சம்பந்தர் திருநட்சத்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி அன்று அன்னாபிஷேகமும் பால் மாங்காய் நிவேதனமும் செய்யப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு மேற்கே 18 கி.மீ. தொலைவில் உள்ள நெடுங்குடியில் வைகாசி விசாக விழா 10 நாட்கள் நடைபெறும். அதில் 9ம் நாளன்று தேரோட்டத்தில் அம்மன் பிரகன்நாயகி தனியாகவும், பஞ்ச மூர்த்திகள் தனியாகவும் தேரில் பவனி வந்து பக்தர்களைப் பரவசப்படுத்துவர்.