கொல்கத்தாவிலிருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில், ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது தாரகேஸ்வரர் திருக்கோயில். பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக அழகான கோயில். விஷ்ணு தாஸ் என்ற சிவ பக்தரும் அவரது சகோதரர் இருவரும், ஒரு பசு தினமும் குறிப்பிட்ட இடத்தில் தாமாகவே பால் பொழிவதைக் கண்டு வியந்து, கண்டெடுத்த சுயம்பு மூர்த்தம்தான் இன்று பல பக்தர்களாலும் வணங்கப்படுகிறது. ராஜா பாராமுல்லா என்பவரால் 1729ல் இந்த கோயில் எழுப்பப்பட்டது. தூத்புகார் எனும் மிகப்பெரிய குளத்தில் நீராடி மக்கள் சிவ தரிசனம் செய்கிறார்கள். அதனால் கோயில் எப்போதும் ஈரமாகவே உள்ளது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர் என்பதால், குளத்து நீரை முகர்ந்து அபிஷேகம் செய்தபடி இருக்கிறார்கள். இங்கு நீராடினால் அனைத்துப் பாவங்களும் தொலைந்து, பக்தர்களின் நியாயமான ஆசைகள் நிறைவேறுவதால் இந்த கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. இக்கோயிலில் காளி மற்றும் லக்ஷ்மி நாராயணருக்கு தனி சன்னிதிகள் உள்ளன. சிவனுக்கு உகந்த திங்கட்கிழமைகளில் திருவிழா கூட்டமாக பக்தர்கள் கூடுகின்றனர். சிவராத்திரி சமயம் மிகப்பெரிய அளவில் ஜாத்ரா நடைபெறுகிறது. பக்கத்து கிராம மக்கள் நடை பயணமாக வந்து சிவ தரிசனம் செய்தும் அருள்பெறுகிறார்கள். காலை 6 முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்து இருக்கும்.