பதிவு செய்த நாள்
19
மே
2018
11:05
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அடுத்துள்ள, சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில், தேர் திருவிழாவையொட்டி, கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர். சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமையில் தேர்த் திருவிழா துவங்கும்.
இந்தாண்டு, கடந்த, 7ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. பூச்சாட்டு விழா, கிராம சாந்தி, வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தன. கடந்த, 15ம் தேதி கம்பம் நடும் விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி, பூவோடு எடுத்தும் பக்தர்கள் தினமும் வழிபடுகின்றனர். நேற்று காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில், சப்பரத்தில் திருவீதி உலா சென்று அருள்பாலித்தார். இரவு, குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மன் திருவீதி உலா, பூவோடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.வரும், 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடும்; இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும், 24ம் தேதி துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது; 26ம் தேதி மாலை, திருத்தேர் நிலைக்கு வருதல், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 27ம் தேதி மகா அபிேஷகம், அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.