பதிவு செய்த நாள்
19
மே
2018
11:05
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி, கால் புண்ணால் அவதிப்படுவதால், உயர் மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானியில், பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த, முனிராஜ் செட்டியார் மற்றும் முருக பக்தர்கள், கடந்த, 1977 ஆண்டு ஏப்., 27ல், பிறந்த பெண் யானை குட்டியை, அதன் நான்கு வயதில், கோவிலுக்கு தானமாக வழங்கினர். அதற்கு வேதநாயகி, 41, என, பெயரிட்டு, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாக பராமரிப்பில் தற்போது வளர்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, யானைக்கு, தோள்பட்டையில் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்டு வந்தது. பின், சரிசெய்யப்பட்டது. தற்போது காலில் ஏற்பட்ட, நகசுத்தி காரணமாக அவதிப்படுகிறது. இதனால், தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த, யானைகள் புத்துணர்வு முகாமுக்கு கூட அழைத்து செல்லவில்லை.
இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், சங்கமேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில், வேதநாயகி முக்கிய பங்கு வகிக்கிறது. காலில் ஏற்பட்ட நகசுத்தியால், காலின் மையப்பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால், படுத்து தூங்க முடியாமல், பல மணிநேரம் கால் உயர்த்திய படி, நின்று கொண்டே இருப்பது வேதனையளிக்கிறது. உயர் மருத்துவ சிகிச்சையளிக்க, கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து, சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி கூறியதாவது: பொதுவாக, யானைக்கு புண் ஏற்பட்டால், குணமாக சற்று காலதாமதமாகும். டாக்டர், உதவியாளர் மூலம் மருந்து, மாத்திரைகள் தினமும் வழங்கி, புண் சுத்தம் செய்யப்படுகிறது. டயட் முறையை பின்பற்றி, சத்தான உணவு வழங்கப்படுகிறது. தினந்தோறும், கோவில் உள்பகுதியில் நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுகிறது. தற்போது, ஆரோக்கியத்துடன் உள்ளது. புண்ணால் அவதிப்படுவதாக வீண் வதந்தியை, ஒரு சிலர் பரப்புக்கின்றனர். இதை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.