பதிவு செய்த நாள்
21
மே
2018
12:05
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தேருக்கு நிரந்தர, ஷெட் அமைக்கும் பணி, மீண்டும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கடந்த, 1941ம் ஆண்டுக்கு பின், இந்த கோவிலுக்கென தனி தேர் கிடையாது. 74 ஆண்டுகளுக்கு பின், 2015ல், 46 லட்சம் ரூபாய் செலவில், 41 அடி உயரத்தில், பிரமாண்ட தேர் செய்யப்பட்டு, அதே ஆண்டில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. லட்சக்கணக்கில் செலவு செய்து செய்யப்பட்ட தேர், பாதுகாப்பாக நிற்பதற்கு, ஷெட் இல்லாததால் மழையிலும் வெயிலிலும் சேதமடைந்து வந்தது. தேருக்காக, 1.5 லட்சம் ரூபாய் செலவில், தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டது. 2016ல் வீசிய வர்தா புயலுக்கு, தற்காலிக ஷெட் மற்றும் தேர் கடுமையாக சேதம் அடைந்தது. அதன் பின், தார்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டிருந்த தேருக்கு, கோவிலுக்கு வெளியே உள்ள ஆதிஷேச குளத்தின் தெற்கு புறமாக, இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு, 20 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தர ஷெட் அமைக்கும் பணி, 2017ம் ஆண்டு இறுதியில் துவங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்த தேர் ஷெட் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ஒரு வாரமாக, தேருக்கான ஷெட் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. தேர் ஷெட்டின் முன் பகுதியில் கண்ணாடி அமைக்கப்பட்டு, தேரை அனைவரும் பார்க்கும் வகையில் பணி நடைபெற்று வருகிறது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.