பதிவு செய்த நாள்
22
மே
2018
10:05
பழநி:பழநியில் அக்னி நட்சத்திர விழா சித்திரை கழுவு நிறைவு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து மலைக்கோயிலில் சுவாமிதரிசனம் செய்தனர்.
பழநியில் அக்னி நட்சத்திரவிழா மே 8ல் துவங்கியது. அக்னி நட்சத்திரம் காலகட்டமான சித்திரையின் பின் 7 நாட்கள், வைகாசியில் முன் 7 நாட்களை சித்திரை கழுவு என அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பழநிமலைக்கோயில் கிரிவீதியை வலம் வருவது சிறப்பாகும். கிரிவலப் பாதையிலுள்ள கடம்ப மரத்திலிருந்து வீசும் சஞ்சீவி மூலிகை காற்று சகல நோய்களை, தீர்க்க வல்லது என்ற ஐதீகம் உள்ளது. இதனால் கிரிவீதியில் உள்ள கடம்ப மரத்தில் பூத்து குலுங்கும் பூவையும், இலைகளையும் பெண்கள் தங்களது தலையில்சூடி மலையை கிரிவலம் வருகின்றனர். உடுமலை, திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை, பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நேற்றுமுன்தினம் மாட்டு வண்டிகளில் வந்து பழநியில் குவிந்தனர். அவர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடிகள் எடுத்து ஆட்டம்பாட்டத்துடன் அதிகாலை 3:00 மணி முதல் மலையை கிரிவலம் வந்து காலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தனர். மீண்டும் அவர்களது ஊருக்கு மாட்டுவண்டிகளில் புறப்பட்டு சென்றனர்.