பதிவு செய்த நாள்
22
மே
2018
12:05
காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் திருப்பணிக்கு, கூடுதலாக, 27 கிலோ தங்கம் கிடைக்காததால், இரு ஆண்டுகளாக முடங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில், மிகவும் பழமையானது ஏகாம்பரநாதர் கோவில். இக்கோவில், 23 ஏக்கரில் அமைந்துள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவின் போது, மரத்தேர், வெள்ளித் தேரில் மட்டுமே, ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் பவனி வருகிறார். நன்கொடை : எனவே, தங்கத்தேரிலும் ஏகாம்பரநாதர் வலம் வர வேண்டும் என, சிவ பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 2014, செப்., 7ல், ஏகாம்பர நாதர் இறைபணி அறக்கட்டளை சார்பில், தங்கத்தேருக்கான திருப்பணி துவங்கியது.பக்தர்கள், நன்கொடையாளர்கள் உதவியுடன், 24 அடி உயரமும், 14 அடி அகலமும் கொண்ட தங்கத் தேர் செய்ய திட்டமிடப்பட்டது. 32 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி, 1,500 கிலோ செப்புத்தகடு என, 12 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.அதன்படி, மலேஷியாவில் இருந்து, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு, வேங்கை மரம் வாங்கப்பட்டது. மாமல்லபுரம், ஸ்தபதி ரமேஷ் தலைமையில், மரத்தேர் செய்யும் பணி முடிந்து, 2015ல், மரத்தேர் வெள்ளோட்டமும் நடைபெற்றது. கும்பகோணம் பிரபாகரன், சரவணன் தலைமையில், செப்புத்தகடு பொருத்தப்பட்டது. காஞ்சிபுரம் தமீம் பாய் தலைமையில், தங்கத்தகடு பொருத்தும் பணி நடந்து வந்தது.
நிறுத்தம்: செப்புத்தகட்டின் மீது, தங்கத் தகடு பொருத்த, 5 கிலோ தங்கம் மட்டுமே நன்கொடையாக வந்துள்ளது; அதை வைத்து சிறு சிறு பணிகள் மட்டுமே முடிந்துள்ளதாக, அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும், 27 கிலோ தங்கம் கிடைத்தால் மட்டுமே, தங்கத்தேர் திருப்பணி நிறைவு பெறும் என்கின்றனர். தேர் திருப்பணிக்கு, போதுமான தங்கம் கிடைக்காததால், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கத்தேர் திருப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர் நிற்கும் இடத்தில், போதுமான நிழற்கூரை வசதி இல்லை என, புகார் எழுகிறது. தேர் மீது இரும்பு தகரம் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால், தேர் முழுவதும் மூடப்படாததால், வெப்பம் காரணமாக, தேரின் சில பாகங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி: பல கோடி ரூபாயில் தயாராகும் தேர், முறையான பராமரிப்பு இருந்தால் தான், தலைமுறைகளுக்கு, எந்த சேதமும் இல்லாமல், சுவாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்த முடியும். தேருக்கான பணிகள் முடிவடையும் முன், பராமரிப்பு பணிகள் இல்லாததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். நிழலான இடத்தில் தேரை நிறுத்தவும், தங்கத்தேர் திருப்பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருப்பணி: ஏகாம்பரநாதருக்கு, தங்கத்தேர் திருப்பணிக்கு, தங்கமாகவோ, பணமாகவோ வழங்க விரும்பும் பக்தர்கள், நன்கொடையாளர்கள், ஸ்ரீ ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளையின், 94433 21133 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். - நமது நிருபர் -