பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 28ல் தேரோட்டம் நடக்கிறது. பெரிய நாயகியம்மன் கோயிலில் நேற்று காலை முத்துக் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொடி மரத்திற்கு கும்பகலச அபிேஷக பூஜையுடன் கொடியேற்றம் நடந்தது. மே 27 இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மே 28ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் மாலையில் தேரோட்டம் நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்கக் குதிரை வாகனங்களில் எழுந்தருளுவார். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.