பதிவு செய்த நாள்
23
மே
2018
12:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நாளை தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, தேர் புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 7ம் தேதி துவங்கியது; 15ம் தேதி கம்பம் நடுதல் விழா நடைபெற்றது. பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், பூவோடு எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். விழாவையொட்டி, காலை மற்றும் மாலை நேரங்களில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் தொடர்ச்சியாக, இன்று அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணமும் நடக்கிறது. தொடர்ந்து, நாளை (24ம் தேதி) திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கி, 26ம் தேதி திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முதல் நாள் கிழக்கு பகுதியிலும், இரண்டாம் நாள் கோவில் மேற்கு பகுதியிலும் தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது; மூன்றாம் நாள் தேர் நிலைக்கு வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மூன்று நாட்கள் தேரோட்டம் நடப்பதால், கிராமம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. சூலக்கல் மாரியம்மன் கோவிலில், தேரோட்டத்துக்காக, 27 அடி உயரம் கொண்ட தேர் புதுப்பித்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.