பதிவு செய்த நாள்
23
மே
2018
12:05
திருப்பூர்: விஸ்வேஸ்வரசுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி, நகரின் காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடந்தது.
நேற்று (மே22)ல் இரு கோவில்களிலும் திருவிழா கொடியேற்றம் நடந்தது. வீரராகவ பெருமாள் கோவிலில், சிறப்பு யாக பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது. விஸ்வேஸ்வரசுவாமி கோவில், சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக பூஜை, அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களின் ‘ஓம் நமசிவாயா’ கோஷம், மேள வாத்தியம் முழங்க, கொடியேற்றம் நடந்தது. அதன்பின், பூமி நீளா தேவி தாயார், கனகவல்லி தாயார் சமேத வீரராகவப்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அதேபோல், சோமாஸ்கந்தர் ரூபத்தில் எம்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, தேர் வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இன்று முதல் தினமும் காலை, மாலை நேரங்களில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதி உலா நடக்கிறது. வரும் 26ம் தேதி, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு மற்றும் எம்பெருமான் கருட சேவை புறப்பாடு நடக்கிறது. 27ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளை யானை வாகனத்தில் திருவீதியுலா, அம்மன் பல்லக்கு சேவை மற்றும் அனுமன் வாகன திருவீதி உலா நடக்கிறது. வரும், 28ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி, மதியம், 3:00க்கு, ஈஸ்வரன் கோவில் தேர் வடம் பிடித்தல், 29ம் தேதி, மதியம், பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி, பரிவேட்டை, 31ம் தேதி, தெப்பத்திருவிழா, ஜூன், 1ம் தேதி, மகா தரிசனம், 2ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.