பதிவு செய்த நாள்
24
மே
2018
10:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமர கோட்டத்தில் விற்கப்படும், நெய் தீபத்தில், தரமற்ற கலப்பட நெய் பயன்படுத்துவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கும், ஏகாம்பரநாதர் கோவிலுக்கும், மத்தியில் சோமாஸ்கந்த மூர்த்தமாக, குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவில் விளங்குகிறது.
இந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ள இக்கோவிலில், 19 முதல், வைகாசி விசாகப் பெருவிழா நடந்து வருகிறது. இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் வேண்டுதலுக்காக, நெய்தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், அகல் விளக்கு நெய் தீபம் ஒன்று, 2 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பக்தர்கள் அவரவர் விருப்பப்படி தங்களுக்கு தேவையான எண்ணிக்கையில், நெய் தீபம் வாங்கி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக, தரமற்ற, கலப்பட நெய், தீபத்திற்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கு வழங்கப்படும், நெய் தீபத்தில் உள்ள நெய், பசை போல உள்ளது. மேலும், தீபம் எரியும்போது, நெய் மணம் வீசாமல், ஒரு விதமான கெட்ட வாடை வீசுகிறது. தரமான நெய் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, கோவிலுக்கு வந்த, எம்.பிரவீன்குமார் என்ற பக்தர் கூறியதாவது: செவ்வாய்தோறும், குமரகோட்டம் கோவிலுக்கு வருகிறேன். வாரந்தோறும், ஐந்து தீபம் வாங்கி, விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறேன். ஓராண்டாக, நெய் தரம் குறைவாக உ ள்ளது. மேலும், உடைந்த, பழைய அகல் விளக்கே பயன்படுத்தப்படுகிறது. இது மனதிற்கு சஞ்சலத்தையும், வழிபாட்டில் குறை உள்ளதை போன்று தோன்றுகிறது. எனவே, விலையை உயர்த்தினாலும், சுத்தமான பசு நெய்யும், புது அகல் விளக்கும் விற்பனை செய்ய, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கோவில் செயல் அலுவலர், ந.தியாகராஜன் கூறியதாவது: கோவிலுக்கு தொடர்ந்து சப்ளை செய்து வரும், ஒரே நிறுவனத்தில் இருந்து தான் நெய் வாங்குகிறோம். ெவளியில் எங்கும் வாங்கவில்லை. இருப்பினும், நெய்யின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். அடுத்த மாதத்தில் இருந்து, நெய் தீபம் இல்லாமல், பாக்கெட் நெய் மட்டும் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.