பதிவு செய்த நாள்
24
மே
2018
11:05
ஊத்துக்கோட்டை: சிறுவர், சிறுமியர் ஆட்டத்துடன், மகா கால பைரவர் திருத்தேரில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ளது மகா கால பைரவர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபடுவர்.
விடுமுறை நாட்களில், அதிகளவு பக்தர்கள் இங்கு குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்வர். கடந்தாண்டு, இக்கோவில் வளாகத்தில் கணபதி, வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் உள்ளிட்ட சன்னதிகள் புதிதாக கட்டப்பட்டன. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் கால பைரவர் திருத்தேரில் வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நேற்று முன்தினம் இவ்விழா நடந்தது. காலையில், கிராமத்தில் உள்ள பெண்கள் கணபதி கோவிலில் பொங்கல் வைத்தனர். பின், மகா கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. முன்னதாக, கால பைரவரின் வெள்ளிக்கவசம், உடைகள் அடங்கிய திருஆபரணப் பெட்டி ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. அபிஷேகம் முடிந்த பின், வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். இரவு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறுமியர் நடனமாட உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.