பதிவு செய்த நாள்
24
மே
2018
02:05
இல்லத்தில் பிள்ளையார், சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் மூர்த்திகளை வைத்து வழிபடுவது போன்று காவேரி அம்மன், கங்கை அம்மன் போன்ற நதி தேவதா மூர்த்திகளையும் நாம் அவ்வப்போது வழிபட்டு வரவேண்டும். இதனால் நமது தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். இது இக்கால நிலைக்கு மிகவும் தேவையான ஒன்று. புனித நதி நீராடல் போல் பலவிதமான தோஷங்களை எளிதில் நிவர்த்திக்கும் எளிய பூஜை, நதி தேவதா வழிபாடு, நம் வீட்டில் கோயிலில் கடைபிடிக்கும் கலச பூஜையும், புண்ணிய தீர்த்த பூஜை வகை தான். கலசம் என்றால் செம்பு, குடம் போன்றவை. தினமும் மூன்று வேளைகளிலும் உலகத்தார் அனைவரும் ஆற்ற வேண்டிய சந்தியாவந்தன வழிபாட்டில் வரும் ஆசமனம், அர்க்யம், தலையில் நீரைத் தெளித்துக் கொள்ளுதல் (தீர்த்த புரோட்சணம்), கோயிலில் அர்ச்சனையின் போது பூமியில் தீர்த்தம் வார்த்து ஆற்றும் சங்கல்ப பூஜை, ஆசமனம் போன்ற யாவும் தீர்த்த வகைப் பூஜைகளே.
பார்வதி, லட்சுமி, சரஸ்வதி சக்தி தெய்வங்கள் பூமிக்கு வரும்போது துணைக்கு உடன் வரும் சப்தமாதாக்கள் போல், நதிமாதாக்களும் மூன்று சக்தி தெய்வங்களோடு உடன் வரும் வைபவங்களும் நிறைய உண்டு. மஹாகாவேரி வழிபாட்டிற்காக ரிஷிகள், சித்புருஷர்கள் நல்கி உள்ள தான - ஒவ்வொரு வீட்டிலும் ஆற்ற வேண்டிய எளிய வழிபாட்டு முறையை இங்கு காண்போம். எவர்சில்வர், அலுமனியம் அல்லது பூஜைக்கு உரிய தட்டு, மந்தார இலை அல்லது முழு நீளத் தலைவாழை நுனி இலையில் பச்சரிசி பரப்பிடவும். அரிசியின் மத்தியில் மஞ்சள், குங்குமம் இட்ட செம்பை (கலசம்) வைக்கவும். இயன்றால் செம்பிற்குப் பல வண்ண நூல் சுற்றி அலங்கரித்திடவும். கலசமாகிய செம்பினுள் நன்னீரை ஊற்றி துளஸி, வில்வ இலை, ஏலக்காய், ஜாதிக்காய், பச்சைக்கற்பூரம் இட்டுச் செம்பின் வாயில் மாவிலைக் கொத்தை விரித்து நடுவில் மஞ்சள் பூசிய தேங்காயைப் பொருத்திட வேண்டும். தேங்காயின் நான்கு திசைகளிலும் சந்தனம், குங்குமம் இட வேண்டும்.
மஹாகாவேரி மாதாவின் சிலை அல்லது திருவுருவப்படம், காவிரி நதிப் படத்தின் முன் கலசத்தை வைத்துப் பூஜிக்க வேண்டும். ஒரு வாழை இலை, தட்டு அல்லது வெற்றிலையில் அம்மியில் அரைத்த மஞ்சளால் பிள்ளையாரைப் பிடித்து வைக்கவும். வேண்டுமாயின் அரைத்த மஞ்சளில் காவேரி அம்மனுக்கும் மஞ்சள் பிள்ளையார் போல் பிடித்து வைத்தும் பூஜித்திடலாம். முதலில் விநாயகர் பூஜை அடுத்தது குலதெய்வ பூஜை மற்றும் இஷ்ட தெய்வ பூஜை, குலதெய்வம் போல் இஷ்ட தெய்வ பூஜையும் உலக மானுடர் ஒவ்வொருவருக்கும் அவசிய மானதே. இதனையே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். இதுகாறும் வாழ்வில் இஷ்ட தெய்வத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை எனில், விரைவில் இஷ்ட தெய்வத்தைத் தேர்ந்தெடுக்க அனுகிரஹிக்க வேண்டும் என இப்போது இங்கு பிரார்த்திக்கவும். அடுத்தது குருவந்தனம், இப்போதைக்கு குரு அமையாதது போல் தோன்றிடினும், உலக மானுடர் ஒவ்வொருவரும் ஒரு ரிஷியின் வழியில் வந்தவரே. இவரே கோத்ராதிபதி. எனவே எல்லோருக்கும் நிச்சயமாக குரு உண்டு. குரு கிட்டும் வரையில் தனக்குப் பிடித்த மஹான், உத்தமப் பெரியோரின் ஆசிகளை நாடி குரு வந்தனத்தைச் செலுத்தவும்.
இங்கு மஹாகாவேரி மாதா ஆவாஹனப் பூஜை துவங்குகிறது. ஆவாஹனம் என்றால் சாட்சாத் தெய்வத்தை ஏதேனும் ஒரு சாதனத்தில் வரித்தல். இங்கு காவிரி மஹா நதியைக் கலசச் செம்பில் வந்தேகுமாறு ஆவாஹனம் செய்கிறோம். காவேரி மாதா ஆவாஹயாமி, காவேரி மாதா எழுந்தருளனும் என மும்முறை ஓதிடவும். காவேரி நதியே கலசத் தீர்த்தத்தில் வந்து ஆவாஹனமாகும் பாவனம் இது. கீழ்க்கண்ட தேவாரத் திருத்தாண்டகப் பாசுரம், ஏனைய அறிந்த மந்திரங்களையும் ஓதிப் பூக்களால் அர்ச்சிக்கவும். காவேரி மாதாவுக்கான அர்க்ய பூஜையும் உண்டு. ஒரு பஞ்ச பாத்திரத்தில் நன்னீர் ஊற்றி, உத்தரணியில் நீர் ஏந்தி உள்ளங்கையில் ஊற்றிக் கொண்டு கீழ்க்கண்ட அர்க்ய மந்திரத்தை மும்முறை ஓதி, காவேர்யை நம: இதம் அர்க்யம் என்று சொல்லி நீரை பூமியில் வார்ப்பது அர்க்ய பூஜை. (மூன்று முறை அர்க்யம் அளிக்க வேண்டும்)
1. அகஸ்த்ய குண்ட ஸம்பூதே. காவேர தநயே சுபே! மருத்வ்ருதே
க்ருஹாணார்க்யம் மயா ஸந்தாபிதம்வரம் காவேர்யை நம:
இதமர்க்யம்!
2. மருத்வ்ருதெ மஹாபாகே. சர்வ லோகைக
பாவநீ. க்ருஹாணார்க்யம்
மயாதத்தம், பாவநம் குருமாம்ஸதா-
காவேர்யை நம: இதம் அர்க்யம்
3. விஷ்ணுமாயே மஹாகாயே. கவேர குல
ஸம்பவே, ஸஹ்யாசல
ஸமுத்பூதே. க்ருஹாணார்க்யம் வரப்ரதே - காவேர்யை நம:
இதம் அர்க்யம்
4. கும்ப ஸம்பவ கும்பாத்வம் ஸஹ்யாமலக
பூஜயா, சங்கோதகேன
ஸஞ்ஜாதா க்ருஹாணார்க்யம் ஸமுத்ரகே - காவேர்யை நம: