அர்ச்சனை அர்க்யம், கற்பூர ஆரத்தியோடு அவரவர் வசதிக்கு ஏற்ப நைவேத்யம் படைத்து தானமளிக்கவும். பால் பாயசம் விசேஷமானது. குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து தரையில் வீழ்ந்து நமஸ்கரிப்பது புனிதமானது. செம்புத் தீர்த்தத்தைக் காவிரி நதி தீர்த்தப் பிரசாதமாகச் சிறிது அருந்திட வேண்டும். மாவிலை கொண்டு செம்புத் தீர்த்தத்தை இல்லம் முழுதும் தெளிக்க வேண்டும். குளிக்கும் நீரில் காவிரி நதித் தீர்த்தமாக இதனைச் சேர்த்து நீராடிடலாம். காவேரி மாதா பூஜையின் நிறைவில் சிறுமியர், கன்னிமார்கள், சுமங்கலிகளை காவேரி அம்மனாக பாவித்து, அவரவர் வசதிக்கேற்ப தாம்பூலம், வஸ்திரம், புஷ்பம், மங்களப் பொருட்களைக் கொடுத்திடவும், மிக எளிமையான பூஜை. இதனை எப்போதும் எந்நாளிலும் இல்லத்தில் நிகழ்த்திடலாம். பூஜையின் நிறைவாக நமது பூஜா பலன்கள் அனைத்தையும் உத்திரிணியில் நீர் எடுத்து வலது உள்ளங்கையில் ஊற்றி இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.