பதிவு செய்த நாள்
26
மே
2018
11:05
கிருஷ்ணகிரி: சந்தூர், திரவுபதியம்மன் கோவில் மகாபாரத விழாவில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், மகாபாரத விழா கடந்த, 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மதியம், 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை, 18 நாட்கள் மகாபாரத கதை வாசிப்பும், இரவில் மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடந்து வந்தன. நேற்று (மே 25)ல் காலை, 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. நாடக கலைஞர்கள் கிராமத்தை சுற்றி, சண்டையிட்டு கொண்டு வலம் வந்தனர். பின்னர், துரியோதனன், பீமன் சண்டையில் துரியோதனன் இறப்பது போல் நாடக குழுவினர் நடித்துக் காண்பித்தனர். மாலை, 6:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். சந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.