உறவினரின் இறப்புத் தீட்டை எத்தனை நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2018 03:06
ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள் இறந்தால் இறந்தவருடன் ஏற்பட்ட உறவின் நெருக்கத்துக்குத்தக்ககாக தீட்டு காக்க வேண்டிய நாட்கள் தர்ம சாஸ்திரத்தில் தீர்மானிக்கப்படுகின்றன. அதாவது, மிகவும் நெருங்கிய உறவினரான சித்தப்பா, பெரியப்பா, தாயார், தந்தை, அப்பப்பா (தந்தையின் தந்தை) போன்றவர்கள் இறந்தால் அவர்கள் இறந்த நாள் முதல் பத்துநாட்கள் முடியும் வரையில் இறந்தவரின் ரத்த சம்பந்தம் இருப்பதால் மேற்கூறிய உறவினரின் உடலில் ஒருவிதமான தீட்டு ஏற்படும். ஆகவே, மேற்கூறிய உறவினர்கள் இறக்கும்போது பத்து நாட்கள் தீட்டு அனுசரிக்க வேண்டும். நெருங்கிய உறவினராக அல்லாமல், சற்று தூரத்து உறவினர்களான அம்மப்பா (தாயின் தந்தை) அம்மம்மா (தாயின் தாயார்), மாமா, மாமி முதலானவர்கள் இறந்தால் இறந்த நாள் முதல் மூன்று நாட்கள் முடியும் வரையில் தீட்டு காக்க வேண்டும்.
மிகவும் தூரத்து சம்பந்த உறவினர்கள் இறந்தால், அதாவது தாத்தா, பாட்டிக்கும் மேற்பட்ட முன் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இறந்தால் ஒன்றரை நாள் அல்லது ஒரு நாள் மட்டுமே தீட்டு காத்தால் போதும். என்ன உறவு என்றே தெரியாது. ஆனாலும், குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் தூரத்து உறவினர் என்று கருதப்படும் ஒருவர் இறந்தால் அவருக்காக தலை முழுகி ஸ்நானம் செய்தால் மட்டும் போதும். இவ்வாறு ஒருவர் இறந்ததற்காக மற்றவர் தீட்டு காப்பதால், இறந்தவர் இவ்வுலகில் வாழ வேண்டிய காலத்தில் அவரால் வாழ முடியாமல் பாக்கி இருக்கும் அவரது ஆயுள் தீட்டு, காப்பவருக்கு வந்து சேரும். தீட்டுக் காப்பவரின் ஆயுள் அதிகரிக்கும் என்கிறது. தர்மசாஸ்திரம். இவ்வாறு இறந்ததற்காக தீட்டுக் காக்கும் நாட்களில் கோயில்களுக்குக் செல்வதோ வீட்டில் பூஜை செய்வதோ, ஜபம், ஹோமம் போன்றவற்றில் கலந்து கொள்வதோ, தீட்டில்லாத (பூஜை ஜபம் ஹோமம் பாராயணத்தில் ஈடுபட்டுள்ள) மற்றவருடன் கலப்பதோ செய்யக்கூடாது.