அனைத்துலகும் தன்னுள்ளே நிற்க, நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான் என்று ஆழ்வார் கூறுவது நாராயணன் என்னும் பெயர் விளக்கமாகும். அறிவுள்ள, அறிவற்ற இவற்றை உடலாகக் கொண்டவன். பரமாத்மா நாராயணன் என்பது வேதத்தின் தீர்ப்பு - இதுவே விசிஷ்ட அத்வைதம். தான் நினைந்த எப்பொருளுக்கும் வித்தாய், முதலில் சிதையாமல் அவற்றுள் ஊடுருவியும் அவையனைத்தையும் தன்னுள் ஒடுக்கியும் நிற்பவன் நாராயணன். அந்தர் பஹிச்ச: தத்ஸர்வம் வியாப்ய நாராயண ஸ்தித, என்கிறது வேதம். வேதம் தமிழ் செய்த மாறனின் திருவாய்மொழியில் விளக்கம் பெறாத தத்துவம் வேறு இல்லை. மந்திர விளக்கம்: பிரணவத்தின் விளக்கம் திருமந்திரம். அதன் விரிவு துவயம் அதை ஏற்றுத் தன் தாள் பணிவோர் பாவங்கள் போக்கி, தண்ணியனாக நின்று, கவலையுறாதே என அபயமளிக்கிறான் கண்ண பெருமான். திருமந்திரம், துவயம், கீதையின் சரமசுலோகம் மூன்றையும் இரகசியங்களாக வைத்து, ஆசார்யன் மூலம் உபதேசமாகப் பெறுவது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் (மரபு).
ஸ்ரீவைஷ்ணவன் அறிய வேண்டிய இரகசிய மந்திரங்களை மூன்று நிலைகளில் வெளியிட்டவனும் நாராயணனே பத்ரிகாசிரமத்தில் நாராயண ரிஷியாக ஆசார்யனும், நரனாகிய சிஷ்யனுமாகி, பகவான், திருமந்திரத்தை வெளியிட்டான். குருவும், சிஷ்யனும் தானே ஆனதால் பகவான் தன்னளவில் நின்று விட்டது இவ்வுபதேசம். அடுத்து, துவய மந்திரத்தை ஸ்ரீவைகுண்டம் என்னும் பாற்கடலில் பரமன் தன் தேவியான திருமகளுக்கு உபதேசித்தான். பகவானே உபாயம் (அடைவிக்கிறவன்) உபேயம் (அடையத்தக்கவன்) என்று நெறிவாசல் தானேயாய் நின்ற நிலை காட்டி, அருளினான். இன்பச் சூழலில் பரமபோக்யமாக அமைந்தது இம்மந்திரம். இது மந்த்ர ரத்னம் எனப்பெறும். மூன்றாவது இரகசியம் - கீதாசார்யன் அர்ஜுனனை சிஷ்யனாக வைத்து உலகோர் அனைவரும் பொதுவாய்- ஏற்கும் வகையில் மனிதனே! உன் தலைச் சுமையை என் தாளில் போட்டு, என்னையே ரட்சகனாகச் சிந்தித்திரு, எத்தகைய பாவத்திலிருந்தும் உன்னை விடுவிப்பேன்; கவலையுறாதே என்று கண்ணன் கூறுகிறான்.
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வமில்லை கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே
என்று அறுதியிட்டு, உறுதியாக உபதேசிக்கிறார் நம்மாழ்வார். நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்று மங்கை மன்னன் அதனை ஏற்று நானும் சொன்னேன் நமரும் உரைமின் என்று நமக்கு ஆணையிட்டார்.