பழநி: வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு, பழநி முருகன் கோவிலுக்கு சேலத்தை சேர்ந்த பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலத்தை சேர்ந்த பக்தர்கள் உடலில் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பறவைக்காவடி எடுத்து கிரிவீதியில் வலம் வந்தனர். மலைக்கோவில் பொது தரிசன வழியில், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் ஒருமணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர். திருமுருக பக்தசபா சார்பில், பக்தி சொற்பொழிவு நடந்தது. மாலையில், 108 திருவிளக்கு பூஜை, இரவு தங்கரதப் புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.