பதிவு செய்த நாள்
13
ஜூன்
2018
12:06
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், அர்ச்சுனன் தபசு நடைபெற்றது. வரும் ஞாயிறு காலை, துரியோதனன் படுகளமும், அன்று மாலை அக்னி பிரவேசமும் நடைபெறும்.ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திரளான பக்தர்கள், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு, பாகாசூரனுக்கு பக்தர்கள் கும்பம் படைத்தனர்.முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, அர்ச்சுனன் தபசு நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு, ஒற்றை காலில் நின்று பாசுபதம் அஸ்திரம் வேண்டி, அர்ச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர், தபசு மேற்கொண்டார். அவருடன் திரளான பக்தர்களும் தவத்தில் பங்கேற்றனர்.மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தவத்தின் முடிவில், அர்ச்சுனன் வரமாக பாசுபத அஸ்திரத்தை பெற்றார். அதை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதமாக, மலர்கள் மற்றும் எலுமிச்சம் பழங்கள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று மாலை, திரவுபதியம்மனின் அக்னி பிரவேசமும் நடைபெற உள்ளன. மறுநாள் தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.