அய்யாவாடியில் நிகும்பலா யாகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2018 11:06
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடியில் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இக்கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றது ஐதீகம். இங்கு அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் சிறப்பானது.
யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரணடைந்தால் சகல ஐஷ்வர்யங்களும் கிடைக்கும். வைகாசி மாத அமாவாசையான நேற்று கோயில் மண்டபத்தி ல் அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, தண்டபாணி குருக்கள் யாக குண்டத்தில் பழங்கள், ஹோம பொருட் கள், இறுதியாக மிளகாய் வற்றலை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்திவைத்தார். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதினம் கட்டளை ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், தமிழக காவல் துறை இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.