பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
12:06
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் உள்ளிட்ட விழா நாட்களில், தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர் வந்து செல்கிறார்கள். இதுதவிர நாள்தோறும் பாதயாத்திரை, பால் காவடி, பறவை காவடி எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பழநி மலையடிவாரம் எப்போதும் கூட்டமாகவே காட்சியளிக்கிறது.
பழநி கோயில், அடிவாரத்தில் ஆங்காங்கே பாலிதீன் பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் கிடப்பதால் பசுமைச் சூழல் பாதிக்கப்படுகிறது. உணவுடன் கிடக்கும் பாலிதீன் பைகளை குரங்குகள் துாக்கி சென்று சாப்பிடுகிறது. இதனால் பாலிதீன் பைகளால் வன விலங்குகளும் பாதிக்கின்றன என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அடிவாரத்தில் பால்காவடி விற்கும் கடைக்காரர்கள் பாலிதீன் பைகளுக்குள் பால் பாக்கெட்டை போட்டு காவடியின் கீழே நான்கு பக்கமும் கட்டித் தருகின்றனர். இதனால் பாலிதீன் பைகள் கோயில் வளாகத்திற்குள் சேர்ந்துவிடுகிறது. இதே போல் பிரகாரத்தில் காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களும் குவிந்து விடுகிறது.
ஓரம் கட்டும் ‘போலி’ கைடுகள்: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானை பாதை, படிப்பாதை, ரோப் கார், வின்ச் மூலம் மலைக்கு செல்லலாம். வின்ச், ரோப் காரில் செல்ல கூட்டம் அலைமோதுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்டத்தை பார்த்து வரிசையில் நிற்க தயங்கும் பக்தர்களை போலி கைடுகள் தனியாக ஓரம் கட்டி ‘வரிசையில் நிற்காமல் மேலே செல்வது முதல் முருகனை தரிசிப்பது வரை அழைத்துச் செல்கிறேன் என்று கூறி, நபர் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். வெளிமாநில, வெளிநாட்டு பக்தர்கள் பலர் இவர்களை ஒரிஜினல் கைடுகள் என்று நினைத்து கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு தரிசனத்திற்கு செல்கின்றனர். கோயில், நகராட்சி நிர்வாகம் போலிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
கோயில் வழிகாட்டி வரைபடம்: வி.கார்த்திக், புனே : நான் பழநி கோயிலுக்கு இரண்டாவது முறை வருகிறேன். கோயில் வளாகம் சுத்தமாக இருக்கிறது. ஆனால், அடிவார கடைகளில் பாலிதீன் பைகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். கோயில் சுத்தமாக இருப்பதை போல அடிவாரமும் சுத்தமாக இருக்க பாலிதீன் பைகளை தடை செய்ய வேண்டும். பழநியை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்து கொள்ள தகவல் மையம் செயல்படுகிறது. இத்துடன் கோயிலுக்குள் வழிபடும் முறை, படிப்பாதைகள், பிரகாரத்தை சுற்றியுள்ள வசதி , அவசரகால வழிகள் குறித்து பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ‘வழிகாட்டி வரைபடம்’ ஒன்றை கோயில் நிர்வாகம் தயாரித்து கொடுக்கலாம்.
பிளாஸ்டிக் பாட்டில் பஞ்சாமிர்தம்: வி. கீர்த்தி, ஆந்திரா : ஆந்திரா திருப்பதி கோயிலை போல பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் அதிகம் வந்து போகிறார்கள். அதிக வருமானம் பெறும் தமிழக கோயிலும் இது தான் என்று கேள்விபட்டு இருக்கிறேன். கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் பிளாஸ்டிக் மற்றும் தகர டப்பாக்களில் விற்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களின் தீமையை கருத்தில் கொண்டு தகர டப்பாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரசாத ஸ்டால்களில் முறுக்கு, லட்டு போன்ற பொருட்களையும் பாலிதீன் பையில் போட்டு தான் விற்கிறார்கள். இதையும் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ‘பேக்கிங்’கில் கொடுத்தால் பழநி கோயில் இன்னும் சுத்தமாக இருக்கும்.
அன்னதானம் அபாரம்:
* காலை 8:00 – இரவு 10:00 மணி வரை கூட்டு, பொரியல் பாயாசத்துடன் தொடர் அன்னதானம், தினமும் 4,500 பக்தர்களும், விழா நாட்களில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பக்தர் வரை சாப்பிடுகிறார்கள்.
* அன்னதானம் சமைக்க நவீன நீராவி கொதிகலன் அடுப்பு மற்றும் காஸ் பயன்படுத்தப்படுகிறது.
* மலை கோயில், அடிவாரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டணமில்லாத சுத்தமான கழிவறைகள் உள்ளன.