பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
01:06
சென்னை:ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, அசையா சொத்துகள் வாயிலாக, கடந்த ஆண்டு மட்டும், 120.48 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து, 606 கோவில்கள்; 56 திருமடங்கள்; 57 திருமடத்துடன் இணைந்த கோவில்கள் என, 38 ஆயிரத்து, 646 நிறுவனங்கள் உள்ளன. கோவிலுக்கு, 4.22 லட்சம் ஏக்கர் நிலங்கள்; 0.56 ஏக்கர் திருமடம் நிலங்கள் என, மொத்தம், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.ஹிந்து சமய நிறுவனங்களுக்கு சொந்தமான, 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள்; 33 ஆயிரத்து, 665 மனைகள், குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. 1.23 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தில், குத்தகைதாரர்கள் பயிர் செய்து வருகின்றனர்.அசையா சொத்துக்களில் இருந்து, ஏழு ஆண்டுகளில், 958.58 கோடி ரூபாய், வருமானம் வந்துள்ளது. 2017 - 18ம் ஆண்டில் மட்டும், 120.48 கோடி ரூபாய், வருவாய் வரப்பெற்றுள்ளது. ஏழு ஆண்டுகளில், தனியார் பெயரில், தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 859 கோவில்களுக்கு சொந்தமான, 6,035.15 ஏக்கர் நிலங்களைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட கோவில்களின் பெயரில், மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு மட்டும், 70 கோவில்களுக்கு சொந்தமான, 476.06 ஏக்கர் நிலங்கள், மீண்டும் கோவில்கள் பெயரில், பட்டா மாற்றம் செய்ய, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில், தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டறிந்து, கோவில் பெயருக்கு மாற்றி, அசையா சொத்துகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட, அறநிலையத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.