திருமுக்குளம் சீரமைப்பில் தாமதம் வேதனையில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2018 01:06
ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தின் சேதமடைந்த வடக்கு பக்க சுற்றுசுவர் சீரமைப்பில் தாமதம் ஏற்படுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். இச்சுவரை சீரமைப்பது குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,சந்திரபிரபா தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பல மாதங்கள் ஆகியநிலையில், இன்னும் புனரமைப்பு பணிகள் துவங்குவதற்கான அறிகுறியே இல்லாதநிலை காணப்படுகிறது. தொல்லியல்துறையின் தடையில்லாசான்று பெற்றால் மட்டுமே புராதன சின்னங்கள் சீரமைக்கமுடியும் என்றநிலையில், அத்துறையின் முறையான அனுமதி கோயில் நிர்வாகத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை.
மேலும் நன்கொடையாளர்களால் மட்டுமே இப்பணி செய்யமுடியும் என்பதால் அறநிலையத்துறையும் அலட்சியத்துடனே செயல்படுகிறது. ஆண்டாள் நீராடும் இக்குளம் பல மாதங்களாக சீரமைக்கப்படாமலே இருப்பது பக்தர்களை மிகுந்த வேதனையடைய செய்துள்ளது. எம்.எல்.ஏ.,சந்திரபிரபா கூறுகையில், தொல்லியல்துறையின் தாமதத்தால் திருமுக்குளத்தை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. துறை அனுமதி கிடைத்தவுடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சிறப்புநிதி பெற்று நன்கொடையாளர்கள் உதவியுடன் சீரமைக்கபடும்,என்றார்.