பதிவு செய்த நாள்
14
ஜூன்
2018
06:06
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
இரவு 11.30 மணிக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்திருந்த ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி சரண கோஷத்துடன் அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த ஊஞ்சல் தாலாட்டில் கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்திபாடல்களையும், அம்மன் தாலாட்டு பாடல்களையும் பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர்.
லட்சக்கணக்கானவர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் மேற்பார்வையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் விழுப்புரம் ஜோதி, மேல்மலையனுார் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கினர்.