செஞ்சி:சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில், பிரம்மோற்சவ விழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் சிம்ம வாகனத்திலும், மூன்றாம் நாள் அனுமந்த வாகனத்திலும், நான்காம் நாள் சஷேவாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது.பெரிய திருவடி எனும் கருட சேவை 13ம் தேதி இரவு நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜையும் நடந்தது. தொடர்ந்து 8:30 மணிக்கு உற்சவர் தேரில் ஏற்றினர். காலை 9:25 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கமலக்கன்னியம்மன் கோவில் அரங்காவலர் அரங்கஏழுமலை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்.