பதிவு செய்த நாள்
16
ஜூன்
2018
11:06
போடி: போடியில் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது சாலைக் காளியம்மன் கோயில். பல நூற்றாண்டுகளுக்கு முன் சதம்பவன காடுகளாக இருந்த இப்பகுதியில் பளியர் இனத்தவர்கள் வசித்தனர். அதன் பின் தனியாரால் இக்கோயில் கட்டப்பட்டது. மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தில் காளியம்மன், அருகே நடராஜர் உள்ளனர். எதிரே நாகரும், சூலாயுதமும் உள்ளது. உள்வளாக இடது புறமாக விநாயகரும், இருபுறமும் துவாரக சக்தி தேவதைகள், வெளிப்பகுதியில் துர்க்கை, லட்சுமி, பிருத்திகாதேவி உள்ளன.
தல விருட்சமாக மிக பழமை வாய்ந்த அரச மரமும், கோயில் பின்புறம் பழமை வாய்ந்த தீர்த்த கிணறும், கோயிலின் இரண்டு புறமும் வாய்க்கால்களும் உள்ளன. தேனியிலிருந்து போடிக்கு வரும் மக்கள் அனைவரும் வணங்கி செல்லும் வகையில் உள்ளது. போடியில் பெரும்பாலான கோயில்களின் திருவிழாக்களின் போது இங்குள்ள தீர்த்த கிணற்றில் கரகம், தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். நடராஜர், காளியம்மனை வணங்கினால் திருமண தடை நீங்கும், குழந்தை பாக்யம் கிட்டும். வேலைவாய்ப்பு, வாழ்க்கையில் மன நிம்மதி கிடைக்கும். தொழில் அபிவிருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை. அதற்காக தீர்த்த கிணற்றில் உப்பு, மிளகு போட்டு மனம் உருகி வேண்டிக் கொள்கின்றனர். தோஷ நிவர்த்தி நீங்க அரச மரத்தடியில் உள்ள நாகர், ராகு, கேதுவுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர். தினந்தோறும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். வழக்கமான கால பூஜைகள், விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கோயில் குறித்த கூடுதல் விபரங்களை பூஜாரி பி. முருகனிடம் 86956 82523 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.