வலி இல்லாமல் வாழ்க்கை நடக்காது.சிரமங்களைக் கடந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிச் சிகரத்தைத் தொட முடியும். தியாக குணமும், பற்றின்மையும் உண்டாகி விட்டால், ஆன்மிகம் என்னும் மாளிகைக்குள் நுழைய தகுதி அடைந்ததாகப் பொருள். கிடைத்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.யாரும் கடமையில் இருந்து தவறக்கூடாது. அதற்காக பலனையும் எதிர்பார்க்கக் கூடாது. ஓய்வு அறியாத உழைப்பே அதன் அடிப்படை.ஆன்மிகச் சிந்தனை மனிதனுக்கு சிறப்பளிக்கும். தேவையற்ற சிந்தனைகள் தீமையே தரும். எல்லாத் தேவைக்கும் பிறரை நாடுவதுபலவீனம். நம்பிக்கையுடன் தன்னை உயர்த்துவதே உண்மையான பலம்.‘உழைத்துப் பாடுபடும் மனிதர்களைக் கண்டால் தெய்வத்திற்கு மிகவும் பிடிக்கும்’ என்கிறது ரிக் வேதம். பொறுமைசாலிகளிடம் பொறாமை உணர்வு உண்டாவதில்லை. உடம்பில் உயிர் இருக்கும் வரை கடமை உணர்ச்சி இருக்குமானால் பூலோகமே சொர்க்கமாகும். உயர்வுக்கும், தாழ்வுக்கும்அவரவர் மன நிலையே காரணம்.தன்னை மட்டுமில்லாமல், தன்னோடு சேர்ந்தவர்களையும் பேராசை அழித்துவிடும். உண்ணும் உணவு சத்தாகஇருப்பதோடு, நல்ல மனநிலையோடு சமைப்பதும் அவசியம்.விண்ணுக்கு வேலி இல்லாதது போல, ஞானிக்கும் இனம், மொழி, நாடு என்ற பாகுபாடு இல்லை.
பணிவில்லாத கல்வி பயனற்றது. முற்றியநெற்கதிர் சாய்ந்து விடுவது போல, பணிவான அறிஞர்களிடம் ஆணவம் இருப்பதில்லை. அரிய செயலாற்ற விரும்பினால், மனம் ஒருமுகத்தன்மையுடன் இருக்க வேண்டும். மன இறுக்கம் தரும் விஷயங்களில் ஈடுபடுவது கூடாது. காலம் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. காலத்தின் அருமை கருதி அதைப் பயன்படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன், அதனால் உண்டாகும் நன்மை, தீமையை ஆராய்ந்துதீர்மானிப்பது அவசியம். தன்னம்பிக்கையும், மன உறுதியும் முழுமையானதாக இருந்தால் வெற்றி நம் வாசலைத் தேடி வரும்.தேவையற்ற சிந்தனைகளில் உழலும் மனதை உயர்த்த, இடைவிடாத பயிற்சியும், முயற்சியும் தேவைப்படுகிறது. அரைத்த சந்தனம் மணப்பது போல,உழைப்பவனின் வாழ்வில் உயர்வும், புகழும் பெருகும்.சத்தியம் எந்தக் காலத்திலும் அழிவதில்லை. அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு முத்திரையாக வைத்துள்ளனர். (மகான் கமலாத்மானந்தர்)