பதிவு செய்த நாள்
20
ஜூன்
2018
10:06
பேரூர்:பேரூரில் ஆனி உற்சவ நாற்று நடவு விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திரளானோர் வயலில் இறங்கி, குலவையிட்டு நாற்று நட்டனர். கோவை,பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி உற்சவ நாற்று நடவு விழா, சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த, 11ம் தேதி மாலை, 6:00 மணிக்கு தேவேந்திர குல வேளாளர் மடத்தில், நாற்று விடுதல் நிகழ்ச்சியுடன், ஆனி உற்சவ விழா துவங்கியது. 12ம் தேதி சூரியபிரபையும், அதை தொடர்ந்து அனைத்து நாட்களும், மாலைதோறும் நெல்நாற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
நேற்று மாலை 3:00 மணிக்கு, சுவாமி பட்டீஸ்வரர் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரத்துடன், அம்பாளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். மாலை, 4:00 மணிக்கு, மடத்திலிருந்து பொன்னேறு பூட்டி பேரூர் கோவில் வாசல் நோக்கி ஊர்வலம் நடந்தது.சிவாச்சாரியார்கள் புண்யாகவாசனம் செய்து, புனித நீரை பொன்னேறுக்கு ஊற்றினர்; ஏருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், நாற்று நடவு மண்டலத்தில் உள்ள வயலில் ஏர் உழுது வணங்கினர். அதைத்தொடர்ந்து, சுவாமி திருமடத்துக்கு சென்று, நடப்பட்டிருந்த நாற்றுக்களை பொதுமக்கள் எடுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு பேரூர் கோவில் குருக்கள் வயலில் இறங்கி நாற்று நட்டார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் வயலில் இறங்கி, குலவை சப்தமிட்டு சுவாமியை பூஜித்து நாற்று நட்டனர். சுவாமி பல்லக்கில் எழுந்தருள, பேரூர் பள்ளுபடல புராணம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, பட்டீஸ்வரர் சுவாமி, அம்மாள் சமேதரராக திருவீதியுலா சென்றனர்; சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையுடன், நாற்று நடவு உற்சவ விழா நிறைவடைந்தது.