பதிவு செய்த நாள்
20
ஜூன்
2018
10:06
சென்னை: சிதம்பரேஸ்வரர் கோவில் தேரோட்டம், 13 ஆண்டுகளுக்கு பின், நேற்று கோலாகலமாக நடந்தது. சென்னை, சூளையில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, 200 ஆண்டுகள் பழமையான சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் போலவே, ஆகாயத்தலமாக இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவரும், உற்சவரும், ஒருவரே ஆவர். இக்கோவிலின் தேர், பழுதடைந்து இருந்ததால், 13 ஆண்டுகளாக, தேரோட்டம் நடத்தப்படாமல் இருந்தது. பக்தர்கள், அறநிலையத்துறை அதிகாரிகளிடம், பல முறை புகார் அளித்தும், தேர் புனரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் பக்தர்கள், தங்களது சொந்த செலவில், இரண்டு மாதங்களாக, தேர் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர் புனரமைக்கும் பணி, சமீபத்தில் முழுமைஅடைந்தது.இதையடுத்து, ஆனி திருமஞ்சனம் விழாவை முன்னிட்டு, மூலவர் சிதம்பரேஸ்வரர், நேற்று காலை, 8:00 மணிக்கு, தேரில் வீதி உலா வந்தார். பக்தர்கள், பக்தி பரவசத்துடன், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.