பதிவு செய்த நாள்
20
ஜூன்
2018
11:06
உடுமலை:’திருமூர்த்திமலையில், அமாவாசை உட்பட முக்கிய வழிபாட்டு நாட்களில், பஞ்சலிங்கத்தை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து, 900 மீ., உயரத்தில், வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு, பெயர் வர காரணமான, பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள பகுதிக்கு பக்தர்கள் செல்ல பல ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியிலிருந்து பிரிந்து, மேடான மலைப்பகுதியில், இந்த பஞ்சலிங்கங்கள் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரண்டு லிங்கங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. அதன்பின் மீண்டும், புதிதாக லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.ஆனால், பாதுகாப்பு காரணங்கள் எனத் தெரிவித்து, அருவியிலிருந்து பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள, பகுதிக்கு செல்லும் வழித்தடம் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.இதனால், முக்கிய வழிபாட்டு நாட்களில் அங்கு வழிபட செல்லும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
பக்தர்கள் கூறுகையில், ’திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்கங்கள் பிரசித்தி பெற்றவையாகும். மலை மற்றும் அருவியின் சிறப்புகளுக்கு காரணமாக கருதப்படும், அப்பகுதியில் வழிபாடு நடத்த முடியாதது வேதனையளிக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் கனமழையின் போது பிரச்னைகள் ஏற்பட்டன. தற்போது அந்தளவுக்கான மழைப் பொழிவு இல்லை. எனவே, அமாவாசை போன்ற நாட்களில், இந்து அறநிலையத்துறை சார்பில், கண்காணிப்பு பணியாளர்களை நியமித்து பகல் முழுவதும் வழிபாடு நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.