பதிவு செய்த நாள்
23
ஜூன்
2018
10:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று மூன்று அணையா தீப விளக்குகள் பொருத்தப்பட்டன. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தங்க கொடி மரம், அம்மன் கொடி மரம் மற்றும் கால பைரவர் சன்னதி ஆகிய மூன்று இடங்களில், ஐந்து அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட அணையா தீபம் பொருத்தப்பட்டுள்ளது.
இவற்றில் தீபம் ஏற்றும் கமலத்தில், இரண்டரை கிலோ நெய் பிடிக்கும் அளவுடன், ஐந்து திரிகள் பொருத்தப்பட்டுள்ளன. கமலத்தில் நெய் அதிகமானால், அவை வழிந்து தரையில் கொட்டாமல், வேறு ஒரு பாத்திரத்தில் சேகரிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 10 கிலோ நெய் பிடிக்கும். நெய் தீபம் ஏற்ற நினைக்கும் பக்தர்கள் இதில், நெய் செலுத்தலாம். 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் சன்னதி, ஆதி அருணாசலேஸ்வரர் கோவில், சோமாஸ்பாடி சுப்ரமண்யர் கோவில் என, தலா ஒரு விளக்கு வீதம் மூன்று அணையா விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்று முதல், ஆறு விளக்குகளும் எரிய தொடங்கியுள்ளன. விளக்குகளை, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் ஹர்சவர்தன் கோவிலுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.