பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
01:07
நாமக்கல்: ஆனி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். மோகனுார் சாலை, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை 8:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து மூலவர் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 32 நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு செவ்வரளி, மனோரஞ்சிதம் மற்றும் மல்லிகை உள்ளிட்ட மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ராஜா அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், உற்சவர் பாலதண்டாயுதபாணி சுவாமி, வள்ளி தெய்வானையுடன் வெண் பட்டு உடுத்தி, கல்யாண சுப்ரமணியர் அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, சிறப்பு யாக வேள்வி நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.