பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
02:07
பரமேசுவரனுக்கு, ‘பசுபதி’ என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது, அவருடைய வாகனமான ரிஷபத்தையோ, காவலாளான நந்தியையோ அல்ல, பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு எஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி. தழையைக் கண்ட இடமெல்லாம் ஓடுகிற பசுவைப்போல், இந்திரிய சவுக்கியத்தைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப்போடுவது போல், பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.
‘எங்கே கட்டியிருக்கிறார்? கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே?’ என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப் பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம். அப்படியும் அது பலிதமாகவில்லை. அப்படியான தருணத்தில்; ’முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது. காரியம் ஜயிக்கவில்லை....’ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்.
‘பந்தம்’ என்பதுதான் ‘கட்டு’ நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி. கயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின் மீது கோபம்தான் வரும்.
ஆனால், கட்டை அவிழ்த்து விட்டால் என்ன ஆகிறது? அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை ‘வெளுவெளு’ என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைகிறான். அப்போதுதான் பசுவுக்குத் தன்னைக் கட்டிப் போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது. பசுவைக் கட்டிப் போடாவிட்டால், அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது.
அதுபோல் கர்மாவால் ஈசுவரன் நம்மைக் கட்டிப் போடா விட்டால், நாம் நம்மையும் கெடுத்துக்கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது, எவ்வளவு கெடுப்போம்?
கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு நேரத்திலாவது பசுவுக்குக் கட்டுத்தறியிடம் வந்து படுக்க முடிகிறது. அதேபோல், கர்மம் நம்மைக் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்று கொண்டேயிருப்போம். நம்முடைய க்ஷேமத்துக்காக, நாமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். ‘எப்போது அவிழ்த்து விடுவீர்?’ என்று அவரைக் கேட்டால், ‘ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன்’ என்கிறார்.