‘அஹம் ப்ரஹ்மாஸ்மி, ‘சிவோஹம்’ என்று சொல்லுகிறீரே? நீரே பிரம்மம், நீரே சிவம் என்றால் எப்படி? வேறு மாதிரித்தானே தெரிகிறது- என்று மற்ற ஸித்தாந்திகள் அத்வைதியைக் கேட்கிறார்கள். எல்லாம் பிரம்மம் என்றாலும், தனியாக ஜீவன்கள் மாதிரித் தெரியத்தானே செய்கிறது? இதற்கு அத்வைதி பதில் சொல்லியாக வேண்டும். அத்வைத சாஸ்திரங்களில் இரண்டுவிதமாக விடை சொல்லப்பட்டிருக்கிறது. ‘ஸ்வாமி நாமாவதெப்படி?’ என்றால், அது இரண்டு தினுசு.
ஒன்று சூரியன் நன்றாகப் பிரகாசமாக இருக்கும்போது, தண்ணீரில் கையைத் தோய்த்துக் கீழே தெளித்தால் ஆயிரம் துளிகள் விழுகின்றன. அந்த ஆயிரம் துளிகளிலும் ஆயிரம் சூரியர்கள் தெரிகிறார்கள். ஒரே சூரியன் அப்படி ஆயிரமாகத் தோன்றுகிறான். எந்தப் பதார்த்தத்தில் தெரிகிறானோ, அதற்குத் தக்கப்படி அவனுடைய அளவும் இருக்கின்றது.
இதுபோலவேதான், பிரம்மமாகிற ஒரே சைதன்யமானது (அறிவு), பலவிதமான மனிதர்கள், பிராணி வர்க்கங்களில் பலவாறான அறிவுகளாகப் பிரதிபலித்து, ‘வேறு வேறு’ என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. வாஸ்தவத்தில் ஒரே சூரியன் மாதிரி ஒரே சைதன்யம்தான். இந்த வாதத்தை ‘பிம்ப - ப்ரதிபிம்ப வாதம்’ என்று சொல்லுவார்கள்.