அம்பாள் பரமேசுவரனோடு பிரிக்க முடியாமல் கலந்திருப்பதையே, இவள் பாதி - அவர் பாதியாக ஒன்று சேர்ந்தது போல், அர்த்தநாரீசுவர ஸ்வரூபத்தில் பார்க்கிறோம். சொல்லும் பொருளும் போல் ஈசுவரனும் அம்பிகையும் பிரிக்க முடியாமல் ஐக்கியமாகி திகழ்கிறார்கள். ‘வாக் அர்த்தாவிவ’ - என்று மகாகவி காளிதாஸர் சொல்கிறார். நான் ‘பசு’ என்று சொன்னால், அது ‘ப ’ என்கிற சத்தமும் ‘சு’ என்கிற ஒரு சத்தமும்தான். சொல்லின் சத்தத்திலோ எழுத்திலோ அந்த மிருகம் எங்கே இருக்கிறது, எப்படியிருக்கிறது? என்று கேட்டால், எப்படிச் சொல்வது? எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனாலும், இந்த வார்த்தையைச் சொன்னவுடன் பசுவின் நினைவு உண்டாகிறது. வாக்கும் ஆர்வமும் பிரிக்க முடியாதபடி இருக்கின்றன. இப்படித்தான் பிரபஞ்சத்தில், ஜீவராசிகளில், அவற்றின் எண்ணங்கள் ஆகியவற்றில் பிரம்மம் திகழ்கிறது. எங்கே, எப்படி இருக்கிறதென்று தெரியாவிட்டாலும், இவை எல்லாம் ‘சொல்’ என்றால், இவற்றுக்குப் ‘பொருளாக ’ அந்த மூலப்பொருள் இருக்கிறது.