பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
02:07
இறைவனின் கேள்விகள் மறுமைநாளில் கடுமையாக இருக்கும். அவமானம், வெட்கம் ஆகியவை மனிதனை பிடுங்கித் தின்னும். இதோ! மறுமை நாளில் இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படும்போது, கேட்கப் படும் கேள்வி ஒன்றுக்கு இப்போதே பதில் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறுவதாவது. “மறுமைநாளில் இறைவன் முன்னிலையில் மனிதன் எந்த நிலையில் கொண்டுவரப்படுவான் என்றால், பலவீனம், அவமானம் காரணமாக அவன் ஆட்டுக்குட்டியைப் போன்ற நிலையில் இருப்பான். பிறகு, இறைவன் புறத்திலிருந்து ‘நான் உனக்கு செல்வத்தை அள்ளித் தந்து உனக்கு பல பேருதவிகளை செய்தேனே. அவற்றில் நீ எவ்வாறு செயல்புரிந்தாய்’ என்று கேள்வி கேட்கப்படும்.
அதற்கு அவன், “இறைவா! நான் செல்வத்தை அதிகமாகத் திரட்டி, அதனை பன்மடங்காக பெருக்கி அதை உலகத்திலேயே விட்டு வந்து விட்டேன். என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்பிவிட்டால் அவை அனைத்தையும் என்னுடன் எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்,” என்பான். “நீ மறுமைக்கு என்ன அனுப்பி வைத்தாய்? அதைக் காட்டு,” என்ற கேள்விக்கும் அவன் முன்கூறியபடியே கூறுவான். ஆனால், முடிவில் உலகிலிருந்து மறுமையின் பங்கு அவனிடம் இல்லாததினால் அவன் நரகத்தில் தள்ளப் படுவான் என்கிறார்கள். இந்த நபிமொழியின் பொருள் என்ன? இங்கு சேர்த்து வைக்கும் பணத்தால் பயனில்லை. அந்தப் பணத்தை விதிமுறைகளின்படி தர்மம் செய்திருந்தால் மறுமை உலகில் இன்பத்தை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும். இங்கே நான்கு பேருக்கு நன்மை செய்திருந்தால் அந்த பாக்கியம் கிட்டும். தொழுகையை ஒழுங்காகக் கடைபிடித்து இறையச்சம் மிக்கவனாக இருந்திருந்தால், மறுமைநாளில், ‘இன்னின்ன நான் செய்துள்ளேன்’ என பட்டியலிடலாம். இங்கே, தவறுகள் செய்து சுகம் கண்டுவிட்டு, அங்கே போய் சுகத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் அது நடக்காது.