மாரியம்மன் கோயில் உற்ஸவத்துக்கு வந்திருந்த பாப்பாத்திக்கு, பக்கத்து வீட்டுக்காரி மேகலை அணிந்து இருந்த தங்கக்கொலுசுவை பார்த்ததும் வயிற்றுக்குள் பற்றி எரிந்தது. அண்ணனிடம் ஓடினாள். “ஏண்ணே! அந்த புள்ளை மேகலையை அவ அண்ணன் விவசாய வீட்டிலே கட்டிக் குடுத்தான். அவபுருஷன் அவளுக்கு நகையா வாங்கி பூட்டுறான். நீ என்னை ஆட்டோக்காரனுக்கு கட்டி வச்சே! அவருகிட்ட ஏதாச்சும் கேட்டா, இருக்கிறத வச்சுகிட்டு வாழணுமுனு சொல்றாரு. ஒவ்வொருத்தன் ஆட்டோவுக்கு மீட்டர் மேலே காசு கேட்குறான். இவரு அரிச்சந்திரன் மாதிரி கரெக்டா தான் பணம் வாங்குவாராம்.
இப்படி இருந்தா எப்படி முன்னேற! அண்ணன் தங்கராசுவுக்கு தங்கையின் மனநிலை புரிந்து விட்டது. இருந்தாலும் வெளிக்காட்டவில்லை. அன்றிரவு தங்கராசுவின் நண்பன் மாரிக்கண்ணு ஒரு கொலுசுடன் வந்தான். “பாப்பாத்தி! மத்தியானம் உன் வீட்டுக்கு வந்தேன். நீயும் உன் அண்ணனும் பேசுனது காதில விழுந்துச்சு! நகை வாங்கித்தராத புருஷன் ஒரு புருஷனா! இந்தா நீ கேட்ட தங்கக்கொலுசு! பதினஞ்சாயிரம் கொடுத்து வாங்கினேனாக்கும். போட்டுக்க! நீ மட்டும் என் கூட இருக்கேன்னு சொல்லு! நகையாலேயே அலங்கரிச்சு விடுவேன்,” என்று பல்லைக் காட்டினான். பாப்பாத்தி நடுங்கி விட்டாள். நகை மீது ஆசைப்பட்ட தன்னை உலகம் எப்படி பயன்படுத்த பார்க்கிறது என்று பயந்து போனாள். மறுநாளே ஊருக்கு கிளம்பி விட்டாள். கணவன் காலில் விழுந்து நடந்ததைச் சொல்லி அழுதாள். அவன் அவளை அன்போடு அணைத்துக் கொண்டான். அவள் அண்ணன் தான், நண்பன் மாரிமுத்துவை இப்படி ஒரு நாடகமாடச் சொன்னான் என்ற விபரம் பாப்பாத்திக்கு இன்னும் தெரியாது.