பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
12:07
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கடந்த பிப்., மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கோவில்களில் தீ விபத்தை தடுக்க, இந்து அறநிலையத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தீயணைப்புத்துறை சார்பில், கோவில் பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, கோவில்களில் அணையா விளக்கு வைக்க, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தில் உள்ள கோவில்களில், அணையா விளக்கு அமைக்கப்படுகிறது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், அணையா விளக்கு வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், தீபம் ஏற்றுவதற்கு பதிலாக, நெய் அல்லது எண்ணெய்யை அணையா விளக்கின் மேற்பகுதியில் உள்ள துவாரம் வழியாக ஊற்றினால், விளக்கை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு மாற்றாக, அணையா விளக்கில் எண்ணெய் ஊற்ற அறிவுறுத்தப்படுகிறது, என்றனர்.