பதிவு செய்த நாள்
11
ஜூலை
2018
03:07
சந்ததிக்கும் புண்ணியம் தேடும் சிம்ம ராசி அன்பர்களே!
முக்கிய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் கவலை வேண்டாம். சுக்கிரன் ஆக.2ல் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் பலன் தருவார். தற்போது செவ்வாய், கேது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கின்றனர். புதன், சூரியன், குரு, சனி, ராகு நன்மை தர இயலாதவராக இரு க்கிறார்கள். செவ்வாய், கேதுவால் பொருளாதார வளம் அதிகரிக்கும். தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் இருந்து முயற்சியில் பல்வேறு தடைகளை உருவாக்குவார்.
ஆனால் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக உள்ளதால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். குருவின் பார்வையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவை பூர்த்தியாகும். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். நற்செயலில் ஈடுபட்டு பெருமை தேடித் தருவர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் கூட உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். திருமணம் போன்ற சுபவிஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் மேன்மை கிடைக்கும்.
புதுமணத்தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.சுக்கிரனால் பெண்கள் உதவிகரமாக இருப்பர். எனவே முக்கிய முடிவுகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது வெற்றிகரமாக முடியும். ஆக.2 க்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு, -மனை வாகனம் வாங்க யோகமுண்டு. உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். ஜூலை 20,21, ஆக. 16ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கப் பெறலாம். கணவன், மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும். பணியாளர்களுக்கு பணியில் பிடிப்பு இல்லாத நிலைஉருவாகலாம். பளுவும், வீண் அலைச்சலும் அதிகரிக்கும். சிலர் இடமாற்றத்தை சந்திக்கலாம். வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். ஆனால் ஆக. 2 க்கு பிறகு சுக்கிரனின் துணையோடு நிலைமை சீராகும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி தேடி வரும். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வேலையில் இருப்பவர்கள் சிறப்பான நிலையை காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ஆக.6,7 சிறப்பான நாட்களாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் சூரியனால் வீண் விரயம் ஏற்படலாம். பகைவரால் தொல்லை குறுக்கிடலாம். ஆனால் ஆக.2க்கு பிறகு வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தொழிலில் லாபம் படிப்படியாக அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. ஜூலை 27,28,29ல் திடீர் பணவரவு இருக்கும். கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலனைக் காண்பர். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். பரிசு பாராட்டு கிடைக்கும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். பழம், கீரை வகைகளில் நல்ல வருவாய் கிடைக்கும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம் உண்டு.
பெண்கள் குடும்பத்தினரின் மத்தியில் சிறப்பிடம் பெறுவர். அக்கம்பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் உண்டாகும். தோழிகள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் உற்சாகம் அதிகரிக்கும் தடைபட்ட திருமண பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். ஜூலை 30,31ல் அனுகூல பலன் காணலாம்.
* நல்ல நாள்: ஜூலை 20,21,27,28,29,30,31,ஆக.6,7,8,9,12,13,16
* கவன நாள்: ஆக.1,2 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,6
* நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்:
● தினமும் காலையில் நீராடியதும் சூரிய தரிசனம்
● ஞாயிறு ராகுகாலத்தில் நாகருக்கு பாலபிஷேகம்
● புதன்கிழமையில் பெருமாள் கோயிலில் நெய்தீபம்