பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
10:07
உத்தமபாளையம் பிரசித்தி பெற்ற உத்தமபாளையம் நரசிங்க பெருமாள் கோயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் நேற்று கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
உத்தமபாளையம் நரசிங்கபெருமாள் கோயில் புராதானமானதும், பிரசித்திபெற்றதுமாகும். 600 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில ஆண்டாக திருப்பணி நடந்தது. கம்பம் ராமலிங்கம்பிள்ளை அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் ரா.பாஸ்கர் ரூ. 25 லட்சத்தில் பணிகள் செய்து ஆரம்பித்து வைததார். தொடர்ந்து பழனிவேல்ராஜன்,மொட்டையாண்டி, அய்யப்பன், மன்னார்செட்டியார், முத்துராமன், கவுடர் சமுதாயம் உள்ளிட்ட பலர் உபயதாரர்களாக இருந்து பணிகளை மேற்கொண்டனர். ரூ. 1 கோடியில் திருப்பணிகள் முடிவடைந்துள்ளது. மகாகும்பாபிேஷகம் ஆக.23ல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரதிஷ்டை: ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 29 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தில் கொடிமரம் தயாரிக்கப்பட்டிருந்தது. நேற்று கோயில் வளாகத்தில் அதனை பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. கர்ணம் குடும்பத்தின் சார்பில் ரவி தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அதிகாலை முதல் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோயில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர். காலை 9:50 மணிக்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நான்கு திசைகளிலிருந்து பக்தர்கள் கயிறு கொண்டு இழுத்து கொடிமரத்தை நிலை நிறுத்தினர். நாராயணா, கோவிந்தாஎன கோஷமிட்டனர். வானில் கருடன் வட்டமிட்டது மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்ச்சியில் பிடிஆர் விஜயராஜன், செயல்அலுவலர் செந்தில்குமார், ஓம் நமோ நாராயணா பக்த சபை நிர்வாகிகள் அய்யப்பன், ராயல்ரவி, ஞானவேல், பாலமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.