பதிவு செய்த நாள்
12
ஜூலை
2018
10:07
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் புதியதாக 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் தயாரிக்கப்பட்ட புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது.
இக்கோவில் 13 நாட்கள் நடைபெறும் சித்திரை உற்சவம் சப்தஸ்தான விழாவின்போது 9ஆம் நாள் விழவாக தேர்த்திருவிழா நடைபெறும். மிகவும் பழமையான தேர் வெயில், மழை போன்ற இயற்கை பாதிப்புகளால் பழுதடைந்தது. கடந்த 2 ஆண்டுகளாக தற்காலிக கட்டுத்தேர் கட்டப்பட்டு அத்தேரில் ஐயாரப்பரை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் கோவில் நிர்வாகத்தின் சார்பில், 30 பேர்கொண்ட குழுவினர், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், 18.75 அடி நீளம் மற்றும் உயர அளவில் புதியதாக தேரினை செய்தனர். இழுப்பை மரம் 1250 கண அடி, தேக்குமரம் 20 கண அடி, இரும்பு சாமான்கள் 3 டன் கொண்டு செய்துள்ளனர். தேரில் சிவன், பார்வதி, அப்பர் கயிலைகாட்சி, சுவாமி மலை முருகன், மற்றும் 25,26 குருமகா சன்னிதானங்களின் சிற்பங்கள் உட்பட 450 சிற்ப்பங்கள், 250 மணிகள் கொண்டு பழமை மாறாமல் பணிகள் முடிந்து நிலையில், நேற்றுமுன்தினம் மாலை புனிதநீர் எடுத்துவரப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனை, மஹா பூர்னாதி செய்யப்பட்டது. நேற்று காலை இரண்டாம் யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு புனித நீர் எடுத்துவரப்பெற்று தேருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு. காலை 9 மணிக்கு தேரின் மேல் கும்பம் வைத்து நான்கு முக்கிய வீதிகளின் வழியாக வந்து தேர்நிலையை வந்தடைந்தது. இதில் இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்மந்த சுவாமிகள் தேரின் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கிவைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர்.